Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

தொலைந்துபோன கொசுவின் கண்ணாடி" குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை #BedTimeStory

குழந்தைகளுக்குப் புதிய உலகத்தைப் பரிசாக அளிப்பவை கதைகளே. ஆனால், தற்போது பல வீடுகளில் கதைகள் சொல்வதே இல்லை. கதை சொல்ல விரும்பும் பெற்றோர்களுக்கு உதவும் விதமாக சூப்பரான கதை இதோ!

கதை
“இம்மா, இங்க கவனி, நான் பலகையில் எழுதுறதைக் கவனிக்காம என்ன செய்ற?” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்திலிருந்த 'இட்டி' கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. அன்றைய பாடம் “எப்படி மனிதர்கள் அடிக்க வரும்போது தப்பிப்பது?” என்பதே. இவர்களுக்கு, பள்ளிக்கூட வகுப்புகளே மொத்தம் ஏழு நாள்கள்தான். முதல் நாள் எப்படிச் சாப்பாடு தேடுவது, அடுத்த நாள் பாடம் எப்படி மனிதர்களின் ரத்தத்தைச் சுவைப்பது, எந்த இடத்தில் மறைந்துகொள்வது, கொசுமருந்து போடப்பட்டதும் எப்படி அங்கிருந்து தப்பிப்பது, எப்படி நீண்டநாள் ஆரோக்யத்துடன் வாழ்வது என்று தினம் ஒரு பாடம். முன்னர் எல்லாம் ஐந்து நாள்தான் இருந்தது, இப்போதுதான் ஏழு நாள் பாடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் மொத்தமே ஏழு நாள்கள்தான் பள்ளி. ஆனால், அதற்கே கொசுக்கள் மூக்கால் அழும்.
நம்ம இம்மாவின் பிரச்னைக்கு வருவோம். இம்மா தன்னுடைய மூக்குக்கண்ணாடியைத் தொலைத்துவிட்டது. கண்ணாடி இல்லாததால் பலகையில் எழுதியிருப்பது சரியாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததால் வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார் ஆசிரியர். இம்மா கொசு கொஞ்சம் பயந்துவிட்டது. அப்பா எப்படியும் திட்டப்போகிறார். இம்மாவும் இட்டுவும் எல்லா இடத்திலும் இம்மாவின் கண்ணாடியைத் தேடினார்கள். ஓவென அழ ஆரம்பித்தது இம்மா. “பொறுமையா இரு, எனக்கு ஒரு துப்பறிவாளன் கொசு தெரியும் அவர் நிச்சயம் உன் கண்ணாடியைக் கண்டுபிடிச்சு கொடுத்திடுவார்”. உடனே இருவரும் அந்தத் துப்பறிவாளனைத் தேடிச்சென்றனர்.
இருட்டு அறையின் பின்புறம் சிலந்திகள் நிரம்பி இருந்த இடத்தில் துப்பறிவாளன் இருந்தார். அந்த இடமே விநோதமாக இருந்தது. “வாங்க கொசுக்களே, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று முக மலர்ச்சியுடன் கேட்டது துப்பறிவாளன் கொசு. தன் மூக்குக்கண்ணாடியைக் காணவில்லை என்ற விஷயத்தைத் தெரிவித்தது இம்மா. சில கேள்விகளைக் கேட்டது. ”என் பின்னாடி வாங்க” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது துப்பறிவாளன்.
கதை
வழக்கமாக, கொசுக்கள் நேராகப் போகும் ஆனால் துப்பறிவாளன் கொசு திடீரென வலது புறமும் திடீரென இடதுபுறம் திரும்பித் திரும்பிச் சென்றது. பின்னாடி வந்த இரண்டு கொசுக்களும் கொஞ்சம் குழம்பிப்போயின. வேகமாகப் போய்க்கொண்டிருந்த துப்பறிவாளன் கொசு கொஞ்சம் வேகத்தைக் குறைத்தது. எதிரே ஆசிரியர் கொசு அமர்ந்துகொண்டிருந்தது “வணக்கம் ஆசிரியரே, நலமா?” என்று நலம் விசாரித்துவிட்டு மீண்டும் வேகம் பிடித்தது. இம்மாவின் வீட்டின் பக்கம் போகும் என எதிர்பார்த்தார்கள், ஆனால், துப்பறிவாளன் கொசு அவர்கள் பள்ளி வகுப்பு நடந்த பகுதிக்குச் சென்றது. அங்கும் இங்கும் தேடியது. இம்மாவும் இட்டுவும் அமைதியாகப் பார்த்தன. அட நாம தான் இங்க தேடிட்டோமே. அப்புறம் எப்படி துப்பறிவாளன் கொசு இங்கே கண்டுபிடிக்கும் என உள்ளுக்குள் சிரித்தன.
சரியாகப் பத்தாவது நிமிடத்தில் “இம்மா, அதோ அந்த பெஞ்சுக்குக்குக் கீழே உன் கண்ணாடி இருக்கும் பார். நீ வகுப்பில் அமர்ந்து இருந்த போது கண்ணாடியை கழற்றி வைத்திருக்கின்றாய், மின்விசிறியை யாரோ போட்டபோது கண்ணாடி பறந்து போயிருக்கு, அதை நீ கவனிக்கவில்லை” என்றது துப்பறிவாளன் கொசு. அட ஆமாம் சரியாக அங்கேதான் கண்ணாடி இருந்தது. இம்மா மகிழ்ந்தது.
“துப்பறிவாளன் கொசுவே, உங்களிடம் நான் ஒரு விஷயம் கேட்கவா?”
"கேளேன்”
“உங்களுக்கு நிறைய வயதாகிவிட்டது. ஆனாலும் எப்படிக் கண்ணாடி போடாம இருக்கீங்க? எப்படிக் கூர்மையா யோசிக்கிறீங்க?”
“அதுவா? நான் பச்சையா இருக்கும் எல்லாக் காய்கறிகளையும் விடாமல் சுவைத்துவிடுவேன், அதேபோல கேரட்டையும் விடுவதில்லை. மாலை வேளையில் டிவி பார்ப்பதை அறவே தவிர்த்துவிடுவேன். இன்னும் எவ்வளவு நாள் கடந்தாலும் என் கண் சிறப்பா தெரியும். மூளையும் வேலை செய்யும்..”
இதைச்சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஏதோ பொருள் அவர்கள் மூவரை நோக்கி வந்தது. “என் பின்னாடி வாங்க” எனக் கத்தியது துப்பறிவாளன் கொசு. அதன்படியே இம்மாவும் இட்டுவும் பின்னால் சென்றார்கள். மூவரும் பாதுகாப்பான இருட்டு அறையை அடைந்தார்கள்.
“அப்பாடி!”
“உங்க பள்ளியில சொல்லி கொசு ‘பேட்’ட்டிடம் இருந்து தப்பிப்பது எப்படின்னு பாடம் வைக்கச் சொல்லுங்க இட்டு, இம்மா.. அதைப்பற்றி நானே ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். நல்ல விளக்கப்படமும் அந்தப் புத்தகத்தில் இருக்கு”
“இன்னொரு நாள் பள்ளியா…” என வாயைப் பிளந்தது இட்டு. ஹேவென மற்ற இருவரும் அதனைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.
umanath
விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கதை பேசுதல் - விழியன்



கதை பேசுதல் - விழியன்
குழந்தைகளுக்கு கதை சொல்லு கதை சொல்லு என்கின்றோம். நாம் குழந்தைகளுக்கு கதை சொல்கிறோம். அது என்ன கதையாகவும் இருக்கலாம், ஆனால் அந்தக் கதை குழந்தைகளிடம் என்ன செய்துவிடும், என்ன கொடுத்துவிடும்? கதையின் முடிவில் நாம் கூறும் நீதி போதனை அல்லது கருத்து தான் குழந்தைகளின் மனதில் தங்கும், அதற்கு நேரடியாகவே கருத்தினை மட்டும் கூறிவிட்டு போய்விடலாமே, நேர விரையம் தானே எனலாம். குழந்தைகளுக்கு அந்த கருத்து மட்டும் செல்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.
காகம் வடை திருடிய கதையினைக் கேட்டு வளராத குழந்தைகளே இருக்க முடியாது. எத்தனை தலைமுறையினர் இந்தக் கதையினை கேட்டு வளர்ந்தனர் என்ற வரலாறு நம்மிடையே இல்லை. பல்வேறு விதமாக இந்த கதை கூறப்படுகின்றது, ஆனால் சாரம் ஒன்று தான்.
“ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்க. ஒரு நாள் அவங்க வடை சுட்டாங்க. அங்க வந்த காக்கா, பாட்டியை ஏமாற்றி ஒரு வடையை எடுத்துகிட்டு போயிடுச்சு. வாயில வடையோட ஒரு மரத்துமேல உட்காந்துச்சு. அந்த பக்கமா வந்த நரி காக்காவை பாடச்சொல்லி கேட்டுச்சாம். இந்த தந்திரம் தெரியாத காக்கா ‘கா..கா..கா’ன்னு கரைய, வாயில இருந்த வடை கீழே விழுந்துச்சாம். அந்த வடையை லபக்குன்னு பிடிச்சிகிட்டு நரி ஓடிபோயிடுச்சாம்”
இது வேறு வேறு சின்ன சின்ன மாற்றங்களுடன் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப‌ தன் மொழியில் வட்டார வழக்குகளுக்கு ஏற்ப சொல்லப்படுவதுண்டு. காக்கா வடையை வாயில் வைத்து பாடியதாகவும், கீழே விழுந்த வடையை பாட்டி பிடிப்பதாகவும், நரியை விரட்டி வடையை பாட்டி கைபற்றுவதாகவும், மேலும் சிலபல பிற்சேர்க்கையுடன் கதை சொல்லப்படுகின்றது. பொரியவர்களாகிய நாம் என்ன நினைக்கிறோம்? கதையின் நீதி “ஏமாற்றினால் ஏமாறுவாய்”. ஆனால் கதை அதனை மட்டும் கடத்தவில்லை.
பாட்டியானவள் குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவள். காகமும் குழந்தையை சந்திக்கும் முதல் பறவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அனேகமாக சந்திக்கும் முதல் உயிரினம் காகமே. காகம் காட்டி சோறு ஊட்டாத தாயே இருக்க முடியாது. இப்ப மாறி இருக்கலாம். இரண்டு கதாபாத்திரங்களும் மிக எளிதாக மனதினில் கொண்டுவந்துவிடுவார்கள். பிரியமான பாட்டி எப்போதும் பேரன் பேத்திகளுக்கு பலகாரம் செய்வாள். பாட்டியும் வடை சுடுகின்றாள். ஆக, காட்சிகளை மிக எளிதினில் விரிந்துவிடும்.
எந்த விஷயமும் குழந்தைகளிடம் படங்களாகவே நினைவில் பதிவாகும். நம் விவரிப்புகளை அவர்கள் மனதில் காட்சிகளாக
மாற்றிவிடுவார்கள். இது தான் கதையின் முக்கிய சிறப்பம்சம். ‘பாட்டி வடை சுட்டாள்” என்ற வாக்கியத்தை பாட்டி என்ற இடத்தில் மிகவும் பிடித்த பாட்டியின் முகத்தை பொருத்திக்கொள்வார்கள். தான் பார்த்த சமையலறையில் ஒன்றினில் பாட்டி வடை சுடுவதாகவோ, தாழ்வாரத்தில் அமர்ந்து சுடுவதாகவோ, வாசலில் அடுப்பு வைத்து சுடுவதாகவோ அவரவர் வயதிற்கு ஏற்றார் போல, அனுபவங்களுக்கு ஏற்றார் போல கற்பனை செய்வார்கள். வயதிற்கு ஏற்ப‌ அந்த காட்சியின் விவரங்கள் அதிகரிக்கும். வடை சுடும் பாத்திரத்தின் அளவு, எவ்வளவு பெரிய வடை, பாட்டியின் ஆடை, பாட்டியின் வயது, கேஸிலா, அடுப்பிலா, ஸ்டவ்விலா என்ற விவரங்கள் மாறுபடும்.
இப்படியாக காட்சிக்கு காட்சி அவர்களின் கற்பனையை செழிக்க வைக்கும். காகம் வடையை எடுக்கும் காட்சி, வடையை காகம் வைத்திருக்கும் காட்சி, மரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி, வடை கீழே விழ நரி பிடிக்கும் காட்சி என பல காட்சிகள் இந்த சின்ன கதையின் மூலமே கிடைக்கும். முக்கியமாக ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே நடப்பவைகளை தன் கற்பனைக்கு ஏற்றவாறு குழந்தைகள் நிரப்பிக்கொள்வார்கள். இதுவும் அவர்களின் கற்பனைவளத்தினை அதிகரிக்கும்.
இந்த கற்பனைவளமும் திறனும் தான் உலகின் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம். அடிநாதம். இந்தியாவில் நடைபெறும் ஒரு ஆப்பரேஷனை அமெரிக்காவில் இருந்து கண்கானித்து ஆலோசனை வழங்க இன்று முடியும். நேரடி காட்சிகள் நேரடி ஆலோசனைகள் சாத்தியம். இதனை என்றோ யாரோ கற்பனை செய்துபார்த்திருக்க வேண்டும், தன் சிறுமுயற்சிகளுடன் கற்பனையை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்க வேண்டும். இன்று இது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. கற்பனைத்திறம் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் இருந்து நேக்கும் திறனையும் வளர்ப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திறன்கள் வளர கதைகள் உதவுகின்றது.
இவை மட்மல்ல, பொறுமையாக காதுகொடுத்து கேட்க, பேச, உரையாடல்கள் நிகழ்த்த, வரலாறுகளை தெரிந்துகொள்ள, இன்னும் ஏராளமான உலக ஞானம் பெற...இன்னும் இன்னும் என்னென்னவோ..
- விழியன்
(https://www.facebook.com/umanathselvan?hc_ref=ARRpCDHY5Q_D_bxZ2T-trULGa770iMStscMreUtvsfe1CmaPJxKImEcQtBAVUBQ-wgk)

குழந்தை வளர்ப்பு

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue

த மிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருக...